வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியலில் சேர இதுதான் சரியான தருணம் - யாரை அணுகணும் ஆட்சியர் சொல்றாரு...
விருதுநகர்
வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியலில் விடுபட்ட தகுதியானவர்களை சேர்க்க கிராம ஊராட்சி அலுவலகத்தை அணுகலாம் என்று விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் தெரிவித்துள்ளார்..
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆத்திப்பட்டி கிராமத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சிவஞானம் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். ஊராட்சி பகுதியில் நடைபெறும் மத்திய, மாநில அரசு நிதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: "கிராம மக்கள் அனைவரும் ஏற்கனவே அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், அந்த திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
2011-ஆம் ஆண்டு சமூக, பொருளாதார கணக்கு எடுக்கப்பட்டு வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக அரசு திட்டங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த பட்டியல் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ளது. பட்டியலில் விடுபட்ட தகுதியானவர்களை சேர்க்க கிராம ஊராட்சி அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்" என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் திட்ட இயக்குனர் சுரேஷ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா, தாசில்தார் கார்த்திகாயினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்வராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனிச்சாமி உள்பட அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்..