திருவள்ளூரில், திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறை சார்பில் திருவள்ளுவர் நாள் விழா, தமிழ்ப் பட்டறை ஆண்டு விழா, தமிழர் திருநாள் பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா நடைப்பெற்றது.
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில், திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறை சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது. திருவள்ளுவர் நாள் விழா, தமிழ்ப் பட்டறை ஆண்டு விழா, தமிழர் திருநாள் பொங்கல் விழா ஆகிய மூன்று விழாக்களும் ஒரே மேடையில் அரங்கேறியது.
கருங்குழியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி பேராசிரியை ப.பானுமதி தலைமை தாங்கினார்.
திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறைச் சங்கச் செயலர் தமிழ் நிலவன் வரவேற்றார்.
மதுராந்தகம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சேஷாத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத் தலைவர் க.சுப்பிரமணியன் விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கருங்குழி, அதனைச் சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள், கொன்றைவேந்தன் மனப்பாடப் போட்டி, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி, சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பாட்டு, பட்டிமன்றம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில், ஆசிரியர்கள் மணிமோகன், கோ.இளங்கோ, தே.அருள், அ.சரவணன், தலைமை ஆசிரியர்கள் சங்கர், சந்தானகிருஷ்ணன், தி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்ப்பொழிலன் நன்றித் தெரிவித்தார்.
தமிழர்களுக்கான முப்பெரும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
