Thirunavukkarasar and Stalin will go to Karnataka and ask for water pon.Radhakrishnan

மதுரை

தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குழுவாக கர்நாடகத்திற்குச் சென்று தண்ணீர் தாருங்கள் என்று கர்நாடக முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "பிரதமர் மோடி 15 ஆயிரம் மாணவ, மாணவியர் மத்தியில் தமிழ் மொழியின் பெருமை பற்றி பேசியுள்ளார். தமிழ் தெரியாமல் போனது தனது துரதிஷ்டம் எனவும் கூறியுள்ளார். வேறு எந்த தலைவரும் தமிழுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இல்லை. தமிழகத்தின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுகிறது.

கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசு 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டிய நிலையில், ஒரு ஆண்டுக்கு 50 டி.எம்.சி. தண்ணீர் கூட தரவில்லை.

நிலத்தடி நீரை நாம் பாதுகாத்ததற்காக நம்மை பாராட்ட வேண்டுமே தவிர, தண்ணீர் அளவை குறைக்கக் கூடாது. தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். எதிர்காலத்தில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர், திமுகவினரோடு குழுவாக கர்நாடகத்திற்குச் சென்று இனியாவது தண்ணீர் தாருங்கள் என்று கர்நாடக முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை செயல்படுத்த வேண்டும்.

பிரதமர் வாஜ்பாய் காலத்தில் கொண்டுவரப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தை இல்லாமல் செய்தது காங்கிரசு. அந்த துரோகத்தை செய்தது காங்கிரசு என்றால் அதனை தூண்டிவிட்ட கட்சி திமுக.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது நம்பும்படியாக இல்லை. அவரது பேச்சின் முழு விவரத்தை பார்த்தால் அதிமுகவில் இன்னும் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.