19 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி, ரூ.12 ஆயிரம் ரொக்கம் திருட்டு; லாக்கரோடு தூக்கி சென்ற திருடர்கள்...
அரியலூர்
ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 19 சவரன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம், 250 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்த இரும்பு லாக்கரை தூக்கி சென்ற மர்ம நபர்கள் அதிலிருந்த நகை, பணத்தை எடுத்துவிட்டு குட்டையில் வீசி சென்றனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவில் எதுவும் கிடைக்காததால் படுக்கை அறையில் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், அதுவும் திருடர்களுக்கு எட்டாக் கனியாகவே போனது. இதனால் அந்த லாக்கரை அப்படியே தூக்கி சென்றுவிட்டனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து ஊர் திரும்பிய பழனிசாமியிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தியபோது, அதில் 19 சவரன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம், 250 கிராம் வெள்ளி பொருட்கள், வங்கி புத்தகங்கள், நில பத்திரங்கள் ஆகியவை இருந்தது என்று தெரிவித்தார்.
இந்தத் திருட்டு குறித்து ஆண்டிமடம் காவலாளார்கள் வழக்குப்பதிந்துதனிப்படை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பழனிசாமி வீட்டின் பின்புற பகுதியில் உள்ள குட்டை அருகே வங்கி புத்தகங்கள், நில பத்திரங்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், மர்ம நபர்கள் இரும்பு லாக்கரில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு, லாக்கரை குட்டையில் வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தனிப்படை காவலாளர்கள் செயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, ஆண்டிமடம் ஆய்வாளர் நித்யாவுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அவர்களும் அங்கு வந்தனர்.
பின்னர் செயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் வீரர்கள் குட்டையில் இறங்கி தண்ணீரில் கிடந்த இரும்பு லாக்கரை தூக்கி வெளியே கொண்டுவந்தனர். அந்த இரும்பு லாக்கரை காவலாளர்கள் திறந்து பார்த்தபோது அதில் நில பத்திரங்கள், இரண்டு தங்க தோடுகள், இரண்டு வெள்ளி விளக்குகள் மட்டுமே இருந்தன.
இதுகுறித்து காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.