தாமிரபரணியில் பெப்சி கோக் தண்ணீர் எடுக்க தடை இல்லை - மதுரை உயர்நீதிமன்றம்
பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி ராகவன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற் பேட்டையில் பெப்சி, கோலா குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆலைகளுக்கு குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 12.5 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது. இது தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப் படுகிறது.
இது தவிர குளிர்பான ஆலைகளுக்கு நாள்தோறும் 47 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை.
எனவே குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.