திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு - 7 பேரிடம் 7 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வழக்கமான தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது குழுவாக வந்த 7 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததது. இதனைக் கண்காணித்த அதிகாரிகள், அந்த 7 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது உரிய வரி கட்டாமல் 7 கிலோ தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தங்கக் கட்டிகள் சென்னையில் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பதை அறிய வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.