“பாலில் கலப்படம் இருக்கு ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்....
தமிழகத்தில் உயிருக்கு ஆபத்தான பால் எதுவும் இல்லை எனவும்,886 பால் மாதிரி ஆய்வுகளில் 699 பால் மாதிரிகள் பாதுகாப்பானது எனவும் தமிழக சுகாதாரத்துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பாலில் கலப்படம் செய்யபடுவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.
இதனால் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே கூறியதை தொடர்ந்து பால் கலப்படம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கார்த்திகேயன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனியார் பாலில் கலப்படம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக சுகாதாரத்துறை இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து 2011 ஆகஸ்ட் முதல் 2017 வரை 886 பால் மாதிரி ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து 886 பால் மாதிரி ஆய்வுகளில் 699 பால் மாதிரிகள் பாதுகாப்பானது என எனவும், தமிழகத்தில் உயிருக்கு ஆபத்தான பால் எதுவும் இல்லை எனவும், தெரியவந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.