போலி நகைகள் வைத்து வங்கியில் மோசடி...! தலைமறைவான நகை மதிப்பீட்டாளருக்கு போலீசார் வலை!
வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளின் கடன் தொகையை மாற்றி, போலி நகைகளை, போலி நபர்களைக் கொண்டு கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தேனியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கனரா வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக செந்தில் என்பவர் கடந்த 2005 ஆம ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பொதுமக்கள் வங்கியில் வைக்கும் அடகு நகைகளின் கடன் தொகையை மாற்றி, போலி நகைகளை, போலி நபர்களை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 98,12,000 ரூபாய் வரை செந்தில் மோசடி செய்துள்ளார். இந்த தொகை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
செந்திலின் மோசடியை அறிந்த வங்கியின் மேலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வினோத் என்பவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தெரிந்து கொண்ட செந்தில் மற்றும் வினோத் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு தற்காலிகமானதுதான் என்றும், இந்த தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். நகை மதிப்பீட்டாளரின் மோசடியால், வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று அடகு வைக்கப்பட்ட நகை குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.