Asianet News TamilAsianet News Tamil

தவறான சிகிச்சை அளித்ததால் பெண் பரிதாபமாக உயிரிழப்பு; ஐந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் பிழைக்கவில்லை...

The woman died because of wrong treatment Five hospital treatments did not save her
The woman died because of wrong treatment Five hospital treatments did not save her
Author
First Published Mar 3, 2018, 8:24 AM IST


தூத்துக்குடி

தூத்துக்குடியில் கைவலிக்காக சென்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியை சேர்ந்தவர் சங்கர். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த மாதம் ராமலட்சுமியின் கையில் திடீரென வலி ஏற்பட்டதால் 3-ந் தேதி எப்போதும் வென்றான் அருகே கண்ணக்கட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்து எப்போதும்வென்றானில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஒருவர் நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, 70 வயதான அந்த சுகாதார ஆய்வாளர், ராமலட்சுமிக்கு வலிக்காக இரண்டு ஊசிகளை போட்டு சிகிச்சை அளித்தார்.

பின்னர், அங்கிருந்து கவர்னகிரியில் உள்ள வீட்டுக்கு வந்த அவருக்கு ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வலி அதிகமானதால், 5-ஆம் தேதி ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வீக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். ஆனாலும், அவருக்கு கையில் கட்டி அகற்றப்பட்ட இடத்தில் வலி இருந்து வந்தது. இதனால், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், கடந்த மாதம் 28-ந் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் சங்கர், "தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி இறந்துள்ளார். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவலாளர்கள் வழக்கு பதிந்தனர்.

மேலும், இது தொடர்பாக அவருக்கு ஊசி போட்ட ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரிடம் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கிளினிக் நடத்தி வந்தது எப்படி? அவர் போட்ட ஊசிதான் ராமலட்சுமி உயிரிழப்புக்கு காரணமா? என்ற கோணத்தில் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறான சிகிச்சை அளித்ததால் பெண் இறந்தார் என்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios