இடுகாட்டுப் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் இறந்தவரை புதைக்க முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்...
கிருஷ்ணகிரி
இடுகாடு (மயானம்) பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் இறந்தவர்களை புதைக்க முடியாமல் கிருஷ்ணகிரியில் உள்ள கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், "பந்தாரப்பள்ளி கிராமத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இவர்களில் யாராவது இறந்தால், அதே பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் புதைத்து வந்தோம்.
அவ்வாறு அரசிற்கு சொந்தமான இடமாகிய மயானப் பகுதியை ஒரு சிலர் ஆக்கிரமித்து, அதன் வழியாக கால்வாய் அமைத்து, ஏரியின் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இறந்தவர்கள் பிணத்தை புதைப்பதற்கு இடமில்லாமல் தவிக்கிறோம்.
மயானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம்.
மேலும், ஏரிக்குச் சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமலும் பாதிப்படைந்து வருகிறோம்.
எனவே, மயானப் பகுதி, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதுடன், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.