செல்போனை பறிக்க முடியாததால் பெண்ணை அருவாளால் வெட்டிய திருடன்...! பட்டப்பகலில் பயங்கரம்..!
மதுரையில் செல்போனை பறிக்க வந்தவரிடம் எதிர்த்து போராடிய பெண்ணை ஆத்திரமடைந்த கொள்ளையன் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் குற்றம் மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செல்போன் பறிப்பு மற்றும் திருட்டினை கட்டுப்படுத்தும் நோக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கடந்த ஆண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
40 நாட்களில் 34செல்போன் பறிப்பு குற்றவாளிகளை கைதுசெய்து அவர்களிடமிருந்து62 செல்போன்களும், குற்ற செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்திய 3இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. அதில் 4 பேர் மாணவர்கள்.
இந்நிலையில், இன்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்து சென்ற முத்துலட்சுமியிடம் செல்போனை பறிக்க திருடன் ஒருவன் முயற்சி செய்துள்ளான்.
அப்போது, முத்துலட்சுமி செல்போனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டுள்ளார். அதனால் அத்திரமடைந்த திருடன் முத்துலட்சுமியை அருவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் முத்துலட்சுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.