பேருந்தை தாறுமாறாக ஓட்டி நான்கு பேருந்துகளை இடித்துத் தள்ளிய தற்காலிக ஓட்டுநர் - பேருந்தை ஓட்ட சொன்னதுக்கு இந்த அலப்பறை...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அரசு பணிமனையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி அங்கிருந்த நான்கு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர் இடித்துத் தள்ளினார்.
பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்து. தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உதவியுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நேற்று காலை கூடுதலாக பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வரவழைக்கப்பட்டிருந்த தற்காலிக ஓட்டுநர்கள் எவ்வாறு பேருந்துகளை ஓட்டுகின்றனர் என்று தெரிந்துகொள்ள பேருந்துகளை இயக்குமாறு கூறி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, தற்காலிக ஓட்டுநர் ஒருவர், நகர பேருந்து ஒன்றை பணிமனைக்குள் இயக்கியபோது திடீரென அந்த பேருந்தை தாறுமாறாக ஓட்டி, அங்கு நின்ற நான்கு பேருந்துகளின் மீது மோதினார்.
இதில் அந்த பேருந்துகளின் கண்ணாடிகள் கண்ணாபிண்ணாமாக நொறுங்கின. பின்னர் பணிமனையின் சுற்றுச்சுவர் மீது பேருந்து மோதி நின்றது. இதில் தாறுமாறாக ஓடிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது.
தொடர்ந்து தற்காலிக பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.