தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொத்து பதிவில் கட்டண குறைப்பு மற்றும் தொழில் தொடங்க கடன் உதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget : தமிழக அரசு மகளிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை, சொந்த தொழில் செய்ய கடன் உதவி திட்டம் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழக நிதி நிலை அறிக்கையில் மகளிர்களுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மகளிர்க்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிநடை பயின்றிடும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்ச் சமூகத்தில் மகளிருக்கான உயர் இடத்தையும், உரிய அதிகாரத்தையும் உறுதி செய்திடும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

பெண்கள் பெயரில் சொத்துக்கள்

அதன் தொடர்ச்சியாக, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் 01-04-2025 முதல், 10 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும். இதன் மூலம், மகளிரின் சுயசார்பும் பொருளாதாரச் சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது என தெரிவித்துள்ளா்.

10 லட்சம் ரூபாய் கடன் உதவி

அடுத்ததாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியுதவிக்கென 225 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.