The struggle for water mounts 2 public buses ciraippitippu this time
திருச்சியில் இரண்டு மாதங்களாக தண்ணீர் வழங்கப்படாததால் தண்ணீர் கேட்டு இரண்டு அரசு பேருந்துகளை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி வி.இடையபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வடதாளிப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படாமல் இருக்கிறது.
அங்கிருக்கும் குடிநீர் தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை. மேலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் இப்பகுதி மக்கள் நாளுக்கு நாள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சினம் கொண்ட மக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் கோவில்பட்டியில் இருந்து தாதகவுண்டம்பட்டி வழியாக மணப்பாறை செல்லும் சாலையில் திரண்டனர். இடையபட்டி அருகே அந்த இரண்டு அரசு பேருந்துகளை சிறைபிடித்தனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பெருமாள் என்ற பி.ஆர்.அருணாச்சலம் மற்றும் வளநாடு காவலாளர்கல் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னரே, இரண்டு அரசு பேருந்துகளை விடுவித்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
