ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்;
நீலகிரி
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கூடலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் கூடலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த அலுவலகத்துக்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நேற்று காலை கூடலூர் பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்துக்காக குவிந்தனர். பின்னர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை அடைந்தனர்.
அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பப் பட்டது.
பின்னர் மத்திய அரசை கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான காவலாளர்கள் நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனர்.
அப்போது, இருதரப்புக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.