The son who stabbed his father in drunkenness
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காததால், குடி வெறியில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகனை காவலாளர்கள் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே வேங்கவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவரது மகன் வினு (34) கூலி தொழிலாளி. இவர் சாராயம் குடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளதால் வினுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து வினுவை விட்டு அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு வினு, தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல குடிவெறியில் வீட்டுக்கு வந்த வினு, தனது தந்தை செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் வெறி தலைக்கேறிய வினு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார்.
இதுபற்றி தகவலறிந்த களியக்காவிளை காவல் ஆய்வாளர் ஜமால் மற்றும் காவலாளர்கள் விரைந்து சென்று வினுவை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், “எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் என்னை விட்டு பிரிந்துச் சென்று விட்டார். நான் அவரை என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வரவில்லை.
இதையடுத்து எனது தந்தை செல்வராஜிடம் சென்று எனது மனைவியிடம் சமாதானம் பேசி அழைத்து வருமாறு கூறினேன். ஆனால், அவர் எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எனது தந்தையிடம் தகராறு செய்து வந்தேன். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் அவரது கழுத்தை அறுத்து கொன்றேன்” என்று அவர் காவலாளர்களிடம் வாக்குமூலம் கொடுத்ததாக காவலாளர்கள் தெரிவித்தனர்.
