வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்...!
சென்னை நீலாங்கரை பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரை குமரகுரு நகரில் வசித்து வருபவர் திருவேங்கடம். இவர் தினமும் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்குதான் வீடு திரும்புவார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் திருவேங்கடம் புகார் அளித்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.