The rocket launch is set in Thoothukudi

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கு ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது என்று மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மைய வளாக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ஏவுகணை தகவல் தொடர்புக்கான ஜி.சாட் – 19 என்ற செயற்கைக் கோளுடன் திங்கள்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது சிறப்புமிக்க ஒரு நாள். இது முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துள்ளது.

இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ஏவுகணை கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதற்கான என்ஜின், மகேந்திரகிரியில் வைத்து பல்வேறு கட்டங்களாக 199 முறை சோதனை செய்யப்பட்டது.

இந்த செயற்கை கோள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த செயற்கைகோள் மூன்று நாள்களில் செயல்பட தொடங்கும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய இந்த ஏவுகணைய்யில் சுமார் 4 டன் வரை எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

தற்போது 4 டன் முதல் 6 டன் வரை எடையுள்ள செயற்கை கோள்களைச் சுமந்து செல்வதற்காக "செமி கிரையோஜெனிக்" தொழில் நுட்பத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் "இஸ்ரோ சின்" என்னும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிவடையும்.

இதேபோன்று சந்திராயன் – 2 விண்கலத்துக்கான சோதனைகள் மகேந்திரகிரி மையத்தில் நடந்து வருகிறது. தற்போது முதல்கட்ட சோதனை முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மார்க் – 2 ஏவுகணை மூலம் சந்திராயன் – 2 விண்ணில் செலுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ஏவுகணை ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் நடந்து வருகிறது” என்று அவர் கூறினார்.