குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்க அதிகளவு விழிப்புணர்வு இல்லாததே காரணம் - சைல்டு லைன் அமைப்பு இயக்குநர்
தேனி
அதிகளவில் விழிப்புணர்வு இல்லாததால் இளவயது திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்றவை அதிகரித்து வருகிறது என்று தேனியில் நடைபெற்ற சைல்டு லைன் அமைப்புக் கூட்டத்தில் அதன் இயக்குநர் எஸ். முகமது சேக் இப்ராஹிம் தெரிவித்தார்.
நவம்பவ்ர் 13 முதல் 19-ஆம் தேதி வரை குழந்தைகள், நண்பர்கள் வாரம் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தேனி மாவட்டத்தில் ஏ.எச்.எம். டிரஸ்ட் மூலம் செயல்படுத்தப்படும் சைல்டு லைன் 1098 அமைப்பின் சார்பில் தேனியில் எட்டு வட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து விளக்குவதற்கான கூட்டம் போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டிரஸ்ட் நிறுவனர் மருத்துவர் தேசாய் முன்னிலை வகித்தார். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு வரவேற்புரை மற்றும் தேனி மாவட்ட சைல்டு லைன் செயல்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
இதில் டிரஸ்ட் மற்றும் சைல்டு லைன் அமைப்பு இயக்குநர் எஸ். முகமது சேக் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசியது:
"குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், குழந்தைகளைப் பராமரித்தல், குழந்தைகளுக்கு எதிரான தீங்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க சைல்டு லைன் அமைப்பு உருவாக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் 2014 மார்ச் முதல் சைல்டு லைன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்ட சைல்டு லைன் அமைப்பு மூலம் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு அழைப்புகள் வந்துள்ளன.
2014-15 ஆம் ஆண்டில் 763 அழைப்புகளும், 2015-16-இல் 771 அழைப்புகளும், 2016-17-இல் 891 அழைப்புகளும் வந்துள்ளன. இதில் அதிகமாக இளவயது திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் இடை நிறுத்தல், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்றவை அதிகம்.
இவற்றை சைல்டு லைன் அமைப்பு உடனுக்குடன் விசாரித்து தீர்வு கண்டு வருகிறது. அதிகளவில் விழிப்புணர்வு இல்லாததால் இளவயது திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்றவை அதிகரித்து வருகிறது.
இதற்காக குழந்தைகளை நண்பர்களாக பாவிக்கும் வகையில் "குழந்தைகள் நண்பர்கள்" வாரம் கொண்டாடப்பட உள்ளது.
குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சைல்டு லைன் துணை அமைப்புகளான பெரியகுளம் ஜீவன் ஜோதி, சின்னமனூர் எம்.எம்.எஸ். தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.