தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே பெய்யும் – மகிழ்ச்சியில் விவசாயிகள்...
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வறட்சி இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் எப்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும், தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு முன்னதாகவே பருவமழை தொடங்குகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில்தான் அதிக அளவு மழை பெய்யும். கேரளாவை ஓட்டி இருக்கும் தேனி, கன்னியாகுமரி,நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணிநேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.