அடுத்தடுத்து இடிந்து விழும் அரசு கட்டடங்களின் மேற்கூரை - தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில்...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த மாதம் கோவை பேருந்து நிலைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கு காரணம் அது மிகவும் பழைய கட்டடம் என்பதாலும் சாதாரண மழைக்கு கூட தாக்கு பிடிக்காமல் இடிந்து விழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதேபோல் சிலதினங்களுக்கு முன்பு நாகை அருகே உள்ள பொறையாறில் ஒரு சம்பவம் அரங்கேறியது.
தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பனிமனையில் ஓய்வறை உள்ளது. பணி முடிவடைந்த நடத்துநர்கள், ஓட்டுநர்கள் 20 பேர் இந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 4 மணியளவில் இந்த ஓய்வறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், சம்பவ இடத்தில் 8 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து அரசு கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்து வரும் நிலையில் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.