The private firm that fraudulently paid a bank job
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில், வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஜி.கௌண்டம்பாளையத்தைச் சேர்ந்த டி.தினேஷ்குமார் (36) காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், “நான் எம்.பி.ஏ. பட்டப் படிப்பு முடித்துவிட்டு வேலைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, லாலி சாலையில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியது.
அதை உண்மையென்று நம்பி நானும் இரு தவணைகளில் கடந்த மார்ச் மாதம் ரூ.50 ஆயிரம் செலுத்தினேன். அந்தப் பணத்துக்கு ரசீது கொடுத்துள்ளனர். ஆனால், அதன்பின் அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.
மேலும், சில நாள்களில் நிறுவனத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதே போல, வேலை வாங்கித் தருவதாக வேறு சிலரிடமும் கூறி இலட்சக்கணக்கில் ஏமாற்றி இருக்கின்றனர்.
இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்” என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை வாங்கிக் கொண்ட காவல் ஆணையர் அ.அமல்ராஜ் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
