மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைபாடுகள் - களைய கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம்...
பெரம்பலூர்
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பெ. மாயவேலு தலைமை வகித்தார்.
இதில், சங்க நிர்வாகி செ. மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், மாவட்டச் செயலர் இரா. முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், "மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு அனைத்து ஓய்வூதியர்களுக்கும், அனைத்து நோய்களுக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலர் ஏ. கணேசன், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட நிர்வாகி பி. கிருஷ்ணசாமி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் ஆர். செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்ட இணைச் செயலர் இரா. ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்டபொருளாளர் கி. இளவரசன் நன்றி தெரிவித்தார்.