பிரிட்ஜை திறக்கும் போது அடித்தது ஷாக்... - அணுமின் நிலைய பொறியாளர் பலி...
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் தனது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் பொறியாளர் பிஜய்குமார் ஓஜா. இவர் தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து பலத்த சத்தத்துடன் ஓஜா தூக்கிவீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதியிலுள்ள டி.ஏ.இ (( DAE )) மருத்துவமனைக்கு ஓஜாவை கொண்டுசென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஓஜா உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் பிஜய்குமார் ஓஜாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.