வறண்டு கிடக்கும் ஆற்றில் பாதி புதைந்த நிலையில் பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு…
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில், வறண்டு கிடக்கும் ஆற்றில் பாதி புதைந்த நிலையில் பழமையான கற்சிலையை மக்கள் கண்டுபிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ளது கொவளை கிராமம். இந்தக் கிராமத்தில் இருக்கும் சுகநதி ஆற்றில் மணலில் பாதி புதைந்த நிலையில் இருந்த கற்சிலை ஒன்றை அந்த வழியாகச் சென்ற மக்கள் பார்த்துள்ளனர்.
வறண்டு கிடக்கும் ஆற்றில் இந்தச் சிலை மணலில் கவிழ்ந்த நிலையில் புதைந்து இருப்பது குறித்து கொவளை கிராம நிர்வாக அலுவலர் பிரேம்குமாருக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்குச் சென்ற பிரேம்குமார், சிலை இருப்பதை உறுதி செய்து வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் அளித்தார்.
பின்னர், வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், நரேந்திரன், துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு சென்று அந்தக் கற்சிலையை பார்வையிட்டனர்.
அப்போது, அந்தக் கற்சிலை அம்மன் சிலை என்பதும், சுமார் இரண்டரை அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது என்றும் கண்டறிந்தனர்.
பின்னர், பழைமையான அந்தக் கற்சிலையை வருவாய்த் துறையினர் மீட்டு, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று அந்தச் சிலையை வட்டாட்சியர் அலுவலக பதிவறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.