சென்னையில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர்! மின்னல் வேகத்தில் உயிரைக் காப்பாற்றிய இளம் கான்ஸ்டபிள் !
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரெயில் புறப்பட்டபோது, தண்டவாளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட முதியவரை மின்னல் வேகத்தில் செயல்பட்டு, இளம் ரெயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 8.55 மணிக்கு செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் 5வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் எழும்பூர் முதல் விழுப்புரம் வரை படுக்கைவசதி கொண்ட 2-ம் வகுப்புக்கு பாதுகாப்புக்காக ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் பிரமோத் சிங் பணியில் இருந்தார்.
ரெயில் சரியாக 8.58 மணிக்கு புறப்பட்டவுடன், அனைத்து பயணிகளையும் மேலே ஏறக்கூறி பிரமோத் சிங் அறிவுறுத்தினார். அவரும் எஸ்.3 பெட்டியில் ஏறமுயன்றார். ரயில் நகர்ந்து கொண்டு இருந்தபோது, 60வயது முதியவர் ஒருவர் எஸ்.4 பெட்டியில் ஏற முயன்றார், அப்போது ரயில் வேகமெடுத்தவுடன் முதியவர் ஏற முடியாமல் நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையில் விழுந்து கால் மாட்டிக் கொண்டது. அந்த முதியவரை ரயில் சில அடிகள் இழுத்துச் சென்றதைப் பார்த்த நடைமேடையில் இருந்த பயணிகள் சத்தமிட்டனர்.
இதைக் கவனித்த கான்ஸ்டபிள் பிரமோத் சிங் பெட்டியில் இருந்து குதித்து, மின்னல் வேகத்தில் அந்த முதியவரின் தோள்களைப் பிடித்து லாவகமாக தூக்கி வெளியே நடைமேடைக்கு இழுத்து எறிந்துஉயிரைக் காப்பாற்றினார் . அடுத்த சில வினாடிகளில் அதே எஸ்.3 பெட்டியில் தனதுபணியைத் பிரமோகத்சிங் தொடர்ந்தார்.
விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பதற்றத்தில் அந்த முதியவர் பயத்துடன் காணப்பட்டார். எந்தவிதமான காயமும் இன்றி இருந்த அவருக்கு ரயில்வே அதிகாரிகள் ஆறுதல் கூறி, அடுத்த ரயிலில் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
முதியவரின் உயிரை மின்னல் வேகத்தில் காப்பாற்றிவிட்டு மீண்டும் தனதுபணியைத் தொடர்ந்த கான்ஸ்டபிள் பிரமோத் சிங் அந்த முதியவர் கடவுளாகக் கருதி நன்றி தெரிவித்துக்கொண்டே சென்றார். இது பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரைக் காப்பாற்றிய கான்ஸ்டபிள் பிரமோத் சிங்கை ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.