என்எல்சி-யில் புகுத்தப்படும் தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் - தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
கடலூர்
என்எல்சி சுரங்கங்களில் புகுத்தப்படும் தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எல்சி சுரங்கங்களில் புகுத்தப்படும் தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை தாங்கினார். ஐஎன்டியுசி தலைவர் சுகுமார் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், சிஐடியு பொதுச் செயலர் ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன், அலுவலகச் செயலர் குப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெய்வேலி நகரச் செயலர் திருஅரசு, எம்எல்எப் பொதுச் செயலர் மத்தியாஸ், ஒர்க் மேன் அசோஸியேஷன் செயலர் ஜம்புலிங்கம், டிவிகே பொதுச் செயலர் முருகன்,
ஏஐடியுசி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, பிடிஎஸ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் குப்புசாமி, அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கத்தின் ரகுராமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
“மேல் மண் வெட்டும் பணிகளுக்காக சமீபத்தில் கோரப்பட்டுள்ள தனியார் ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும்.
மூன்று சுரங்கங்களில் ஏற்கெனவே விடப்பட்ட தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கான போனஸ் - இன்சென்டிவ், ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளர்களை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம், பஞ்சப்படியை அமல்படுத்த வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம், மாதத்துக்கு 26 நாள் வேலை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம், எஸ்சி., எஸ்டி., பெடரேஷன் தலைவர் ஆசைதம்பி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.