பள்ளி குழந்தைகளுக்கு வாயில் அலகு குத்திய விவகாரம் - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமாக வேண்டிய கடந்த ஆண்டு 20 பள்ளிக் குழந்தைகளுக்கு வாயில் அலகு குத்திய விவகாரத்தில் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் விளக்கம் அளக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நோயுற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவரின் உடல்நிலை குணமாக வேண்டி அ.தி.முக. கட்சியினர், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி ஆர்.கே. நகர் முருகன் கோவில் இருந்து, தண்டையார் பேட்டை மணிக்கூண்டு வரை 20 குழந்தைகளுக்கு வாயில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிமுக கட்சியின் தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் ‘அம்மா நீண்டகாலம் வாழ்க’ என்ற எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர போலீஸ் ஆணையர், அதிகாரிகள் உள்ளிட்டோர் அறிக்கை அளிக்க கடந்த ஆண்டு நவம்பர் 7-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாநகர போலீஸ் ஆணையர், “ குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது உண்மைதான். ஆனால், அவர்களின் பெற்றோர் அனுமதியுடன்தான் அலகு குத்திக்கொண்டனர். யாரும் வற்புறுத்தவில்லை’’ என்று தெரிவித்து இருந்தார். மேலும், “ இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்து அனுப்பியதாகவும், அடுத்த முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக’’ அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இந்த விளக்கத்தை மனித உரிமைகள் ஆணையம் ஏற்கவில்லை. “ குழந்தைகளுக்கு அலகு குத்தப்பட்டது என்பது மனித உரிமையை மீறிய செயல், பெற்றோர்கள் சம்மதத்துடன் குத்தப்பட்டது என்பதை ஏற்க முடியாது. குழந்தைகளின் கண்ணத்தில் 2 மீட்டர் நீளத்தில் ஸ்டீல் கம்பியை குத்தியது கிரிமினல் குற்றம். இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதை தடுக்கவில்லை. அவர்களுக்கு எச்சரிக்கை மட்டும் செய்தது ஏற்க முடியாது ’’ எனத் தெரிவித்தது.
சென்னை மாநகர போலீஸ் ஆணையரின் பதில் அளித்ததில் திருப்தி அடையாத தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக கட்சிக்காரர்கள் குழந்தைகள் பாதுகாப்புச்சட்டத்தை மீறியுள்ளனர் எனத் தெரிவித்தது.
அவர்கள் மீது பிரிவு 326( ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் உண்டாக்குதல்) 341 (ஒருவர் மீது தவறான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிரான சட்டம்) 34 ( கூட்டாக ஒன்றிணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது) 120(பி) கூட்டுச்சதி, பிரிவு 23 குழந்தைகளுக்கான பாதுகாப்புச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதுகுறித்த 4 வாரங்களுக்குள் முதன்மைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.