ஒரு வாரம் கொடியேற்றி தேசிய கீதம் பாடணும் – தேசிய கொடியை அவமதித்த மருத்துவருக்கு நீதிமன்றம் டக்கரு உத்தரவு…
வேலூர்
சுதந்திர தினத்தின்போது தேசிய கொடியை அவமதித்த மருத்துவருக்கு ஒரு வாரம் தினமும் தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. பங்கேற்று தேசிய கொடியை
ஏற்றி வைத்தார்.
அப்போது மருத்துவ அலுவலர் மருத்துவர் கென்னடி, செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாராம். இதனைக் கவனித்த எம்.எல்.ஏ. அவரது கையைத் தட்டினார். ஆனால் விழா முடியும் வரையிலும் அவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார். அவரின் இந்த செயல் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியின் செய்தியால் பரவியது.
தேசிய கொடி ஏற்றியபோது அதனை அவமதித்த மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நகரசபை உறுப்பினர் இ.சுரேஷ்பாபு ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நகர காவலாளர்கள் அவர் மீது வழக்குப் பதிந்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ அலுவலர் மருத்துவர் கென்னடி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், “ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் தினமும் காலை 10 மணிக்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும், கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும், தேசிய கீதம் பாட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், இதனை ஆம்பூர் நகர காவலாளர்கள் கண்காணித்து ஆம்பூர் நீதிமன்றத்தில் தினமும் தகவல் தர வேண்டும்” எனவும் தெரிவித்து உத்தரவு போட்டார்.
அந்த உத்தரவின்படி முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்பூர் நகர காவலாளர்கள் முன்னிலையில் மருத்துவ அலுவலர் மருத்துவர் கென்னடி தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தி பிறகு தேசிய கீதமும் பாடினார்.