தலைமை செயலகத்தில் மீண்டும் கட்டாயமானது முக கவசம்..முக கவசத்தோடு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்...!
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரைவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முககவசம் இல்லாமல் பங்கேற்று வந்த நிலையில் தற்போது முக கவசத்தோடு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா
கடந்த இரண்டு ஆண்டுகளாக ககொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். மக்கள் தங்களது உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அன்றாட செலவுக்கு கூட வழியில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்திருந்தனர். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் தங்களது இயல்பு வாழ்க்கையை மீண்டும் துவக்கி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த பாதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பரவி தற்போது இந்தியாவிற்குள் மீண்டும் ஊடுருவியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உருவான கொரோனா பதிப்பு தற்போது தமிழகத்திலும் பதிவாகியுள்ளது. சென்னை ஐஐடியில் 4 நாட்களில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி அடைய வைத்தது. இதே போல பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பும் பதிவானது. நாள்தோறும் 20 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஆலோசனை
இந்த நிலையில் கட்டாயம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. முக கவசம் அணிய வில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முகக்கவசம் கட்டாயம்
இந்த நிலையில் மானியக் கோரிக்கை விவாதம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கியதிலிருந்து பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் முகக் கவசம் அணியாமல் சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். இதே போல பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களும் தலைமைசெயலகத்திற்கு வந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்ததன் காரணமாக மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்துக்கு உள்ளே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பாக தமிழக சட்டப் பேரவைக்கு வெளியே மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் முகக்கவசம் இல்லாமல் வரும் சட்டமன்ற உறுப்பினருக்கு முக்கவசம் வழங்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் முதலமைச்சர் சட்டப்பேரைவை கூட்டத்தில் முககவசம் இல்லாமல் பங்கேற்று இருந்தார் இந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்ததன் காரணமாக முக கவசம் அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.