வழக்கறிஞர் வீட்டில் 16-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் கண்டுபிடிப்பு; சிலை திருட்டா? போலீஸ் விசாராணை...
நாமக்கல்
நாமக்கல்லில் வழக்கறிஞர் வீட்டில் 16-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் ஒருவர் இராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் வழக்கு நடத்தி வந்தார். அந்த வழக்கறிஞர் சில ஆவணங்களை திருப்பி தரவில்லையாம்.
இதனையொட்டி நேற்று மாலையில் கால்நடை மருத்துவருக்கு தெரிந்த சிலர் வழக்கறிஞர் வீட்டுக்கு சென்றனர். அப்போது வழக்கறிஞர் வீட்டில் இல்லை. இதனிடையே வழக்கறிஞர் வீட்டில் மூன்று மரப்பெட்டிகளில் சாமி சிலைகள் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இராசிபுரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் முருகன், வள்ளி, தெய்வானை, கால பைரவர், விநாயகர் சிலைகள், நவக்கிரக சிலைகள் என 16-க்கும் மேற்பட்ட புதிய கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சாமி சிலைகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ராஜகணபதி கோவிலுக்கு வாங்கி வரப்பட்டது என வீட்டில் இருந்தவர்கள் காவலாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும், சாமி சிலைகள் எப்படி வந்தது? இது ராஜகணபதி கோவிலுக்கு வாங்கி வரப்பட்ட சிலைகள் தானா? என பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.