பண்பாடு மற்றும் கலாசாரத்தோடு உள்ள மொழி நமது தமிழ்மொழி என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழி கருத்தரங்குக்கு அவர் தலைமை வகித்தார்.

“ஓர் இனத்தின் உயிர், பண்பாடு, கலாசாரத்தோடு பின்னி பிணைந்து உருவாக்கியதே மொழியாகும். மொழி இல்லையேல், நாகரீகம், பண்பாடு இல்லை. அந்தவகையில் பண்பாடு மற்றும் கலாசாரத்தோடு உள்ள மொழி நமது தமிழ்மொழி. தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம். இன்று வரை பயன்பாட்டில் இருக்கூடிய தமிழ்மொழி, தமிழகத்தில் ஆட்சிமொழியாக கடந்த 1956-ம் ஆண்டு உருவானது.

இந்த ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. இதற்காக அவ்வப்போது எண்ணற்ற ஆணைகளை தமிழ்மொழியிலேயே பிறப்பித்து வருகின்றது.
ஒரு மொழி வளர வேண்டும், வாழ வேண்டும் என்று சொன்னால் அந்த மொழி மீது பற்று வைக்க வேண்டும்.

இன்று நம்முடைய தாய்மொழி மீது எந்த அளவுக்கு பற்றுதல் உடையவராக இருக்கின்றோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மத்திய அரசுக்கு, பிற மாநிலங்களுக்கு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தூதரங்கள் ஆகியவற்றிற்கு எழுதக்கூடிய கடிதங்களில் மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். மற்ற இடங்களில் எல்லாம் தமிழ்மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு அலுவலர்கள், தங்களது கோப்புகளிலும், வரைவுகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும்.

மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் பயன்பாட்டை பொறுத்தே அமையும் என்பதால், எங்கும் எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். அப்பொழுது தான் தமிழ் வாழும், வளரும் என்றார் அவர்.

பின்னர் அவர், 2014-ம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழியை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட கல்வி அலுவலகத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட கல்வி அலுவலர் வ.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (பொ) முனைவர் துரை.தம்புசாமி, கலைப் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் முனைவர் இரா. குணசேகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச. நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.