முறையான குடிநீர் வழங்க வேண்டும் - ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டி கிராமத்தில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததையடுத்து இங்கு மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மதுரை-நிலக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட்னர். அப்போது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.