The image of Krishnaswamy of the controversial speech



அரியலூர்

மாணவி அனிதாவின் தற்கொலையை சர்ச்சைப் பேச்சால் கொச்சையாக விமர்சித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் உருவப் பொம்மையை எரித்தும், அவரை கைது செய்யக் கோரியும் அரியலூரில் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி சந்திப்புப் பகுதியில் திமுக-வினர், புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியின் உருவப் பொம்மையை எரித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு அரியலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் ராம ராஜன் தலைமை வகித்தார்.

“தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா விவகாரத்தில் அரியலூர் திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கரை கைது செய்து, சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணசாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உருவப் பொம்மையை எரித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாணவரணி துணை அமைப்பாளர்கள் சக்திவேல், சுரேஷ், விநாயகவேலன், செல்வகுமார் மற்றும் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பத்ம நாதன் உள்பட தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

இதேபோல் அரியலூர் பேருந்து நிலையம் முன்பும் திமுக-வினர் கிருஷ்ணசாமியின் உருவப் பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் நகரச் செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் இளையராஜா, பொதுக் குழு உறுப்பினர் பாலு உள்பட திமுக-வினர் பங்கேற்றனர்.