பயங்கரம்...! சாலையில் உருண்டு வந்த மனிதத்தலை! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலையை வீசிச் சென்றுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் பேருந்துக்காக இன்று காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு, பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை, சர்வீஸ் சாலையில் உள்ள குப்பை ஒன்றில் வீசிச் சென்றனர்.
பிளாஸ்டிக் கவர் வீசப்பட்ட நிலையில், அதில் இருந்து மனித தலை ஒன்று உருண்டு வெளியே வந்து விழுந்தது. இது சாலையில் உருண்டோடியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்களும், பேருந்து பயணிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மர்ம நபர்கள் வீசிச் சென்ற தலையின் முகம் தெளிவாக தெரிந்தது. அருகில் உள்ள கோனாதி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (31) என்பவராக இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே அந்த தலையை மறைமலைநகர் போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். துண்டிக்கப்பட்ட தலையின், உடல் எங்கே இருக்கிறது என்றும், இந்த கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டுள்ள பாலாஜி, பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டு, தலையை மட்டும் சாலையில் வீசிச் சென்ற சம்பவம், காட்டாங்கொளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.