தமிழக பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு இருக்கிறது இந்து அறநிலையத்துறை.

தமிழ்நாட்டில் அதிகளவில் பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சுகாதார வசதி, தங்குமிடம் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், பக்தர்களுக்கு கட்டணமில்லா மொட்டை அடிக்கும் திட்டம், மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செய்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனைத் தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் கோவில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்க பக்தர்கள் நடந்தும் வரும் இடங்களில் குளிர்ச்சி தரும் வகையில் வெள்ளை நிற வண்ணம் பூசுதல் மற்றும் தேங்காய் நார்களினால் பின்னப்பட்ட தரை விரிப்புகள் அமைத்து அவற்றில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து குளிர்விக்க அனைத்து கோவில் அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில்களின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தற்காலிக நிழற்பந்தல் அமைக்கவும் அவற்றில் மின் விசிறிகள் பொருத்தவும், பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கு ஏற்ப இருக்கைகள் அமைக்கவும், அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், மோர் மற்றும் எலுமிச்சை பானம் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ‘இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் மொத்தம் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் 47 முதுநிலை கோயில்களும், முதுநிலை அல்லாத கோயில்களும் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோயில்களில் நடப்பாண்டில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டுதல்படி இந்து அறநிலையத்துறை சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று கூறியிருக்கிறார்.