நெடுவாசல் போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு...
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் போராட்டம் நடத்தலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை சின்னப்பதிடலில் நெடுவாசல் போராட்டம் நடத்த ராஜேந்திரன் என்பவர் காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுக்கோட்டை திடல் மிகவும் சிறிய அளவு இடங்களை கொண்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.