The fishermen rally today to provide relief for the fishermen of Kanyakumari fishermen ...
நாகப்பட்டினம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் இன்று பேரணி செல்ல இருக்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், விழுந்தமாவடி, காமேஸ்வரம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், "ஓகி புயலால் பெறும் சேதம் அடைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு உரிய மீட்பு பணியும், நிவாரணமும் வழங்காத மத்திய-மாநில அரசுகளை கண்டிப்பது.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கேரளா அரசு மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டதுபோல தமிழக அரசும் செயல்பட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வருகிற காலங்களில் ஆழ்கடல் தொழில் செய்வதற்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆழ்கடல் தொழில் பார்க்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே நடவடிக்கை எடுக்க அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நாகப்பட்டினத்தில் ஹெலிப்பேடுடன் கூடிய இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இன்று (திங்கட்கிழமை) நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்" என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் எச்சரித்தனர்.
