மீண்டும் வெடிக்கிறது போராட்டம் - ஹைட்ரோ கார்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு...
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில், மத்திய அரசின் திட்டமான ஹைட்ரோ கார்பனுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பலதரப்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.
அரசியல் கட்சியினர் பலர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையொட்டி தமிழகம் முழுவதும், தொடர் போராட்டம் நடந்து வந்தது. நெடுவாசல் கிராமத்தில் மட்டும் 21 நாட்கள் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தது. இதையடுத்து, பொதுமக்களின் பின், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த மாதம் 22ம் தேதி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அப்போது, 'மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்' என்று அவர் உறுதியளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களுக்கு கடந்த 27ம் தேதி மத்திய அரசு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கியது.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மீது நம்பிக்கை இல்லாததால் மீண்டும் போராட்டத்தை துவங்க உள்ளதாக, நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வரும் 6ம் தேதி நம்மாழ்வார் பிறந்த தினத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து, போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என, போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.