The father who killed the son
ஓமலூர் அருகே சொத்தை பிரித்து கொடுக்க கேட்டு மது போதையில் வெட்ட முயன்ற மகனை தந்தையே அடித்து கொலை செய்தார். மகனை கொலை செய்த தந்தையை தாரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாராமங்கலம் பேரூராட்சியைச் சேர்ந்த கீழ் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி. இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது இளைய மகன் பொன்னுமணி, மைக் செட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பொன்னுமணி தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அவரது மனைவி பிரியா குழந்தைகளுடன் சித்தனூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், பொன்னுமணி தினமும் குடித்து விட்டு தந்தை பொன்னுசாமியிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்கு பொன்னுசாமி, ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதால் தனது காலத்திற்கு பிறகு, அண்ணன், தம்பிகள், அக்கா தங்கைகள் பிரித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
நேற்று பொன்னுமணி குடித்து விட்டு சொத்தை பிரித்து கொடுக்கும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். நிலத்தை பிரித்து கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கத்தியை காட்டியுள்ளார். மேலும் தந்தை பொன்னுசாமியை வெட்டவும் அவர் முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி, அருகே இருந்த மண்வெட்டியை எடுத்து மகனின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பொன்னுமணி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொன்னுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்னுசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
