மாட்டு இறைச்சி தடையை திரும்ப பெறகோரி மாடுகளோடு ஆட்சியரகம் வந்து மனு கொடுத்த விவசாயிகள்…
தூத்துக்குடி
மாட்டு இறைச்சி தடையை திரும்ப பெறக் கோரி தூத்துக்குடி ஆட்சியரகத்திற்கு மாடுகளுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் மனு அளிக்க வந்தவர்கள், உடன் இரண்டு பசு மாடுகளையும் அழைத்து வந்தனர்.
“மத்திய அரசு மாட்டுக்கறிக்கு விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும்” என விவசாயிகள் சங்கச் செயலர் கே.பி.பெருமாள், நிர்வாகிகள் முத்து, சங்கரன் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “மத்திய அரசு மாட்டு இறைச்சி பயன்படுத்த விதித்துள்ள தடையை உடனே திரும்பப் பெற வேண்டும், மாடுகள் விற்பது, வாங்குவதில் உள்ள கெடுபிடிகளைக் கைவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்தக் குறைதீர் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், இலந்தப்பட்டி, முடுக்கலான்குளம், அச்சங்குளம், கோட்டையூர், சால்நாயக்கன்பட்டி, செவல்பட்டி கிராம மக்கள், “புதிதாக உருவாக்கப்பட்ட கயத்தாறு வட்டத்துடன் இந்த 9 கிராமங்களை இணைத்ததால் 45 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே, தங்கள் கிராமங்களை மீண்டும் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.