நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்தி திமுக சார்பில் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

நீதிபதிகள் நியமனம்- இட ஒதுக்கீடு

நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு வழிவகை செய்யும் வகையில் மாநிலங்களவையில் திமுக சார்பாக தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்தார்.

தனி நபர் மசோதா தாக்கல் செய்த திமுக எம்பி

இந்த மசோதாவில், நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது , மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சிசெய்கிறது. 

மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறைமட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள்

மாநிலங்களைவில் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய திமுக எம்.பி வில்சன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள் கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.