விடுமுறை நாட்களிலும் சிறப்பு வுகுப்புகள் நடத்திய  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர் விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதை போல பல்வேறு வகுப்பினருக்கும் இந்த மாத இறுதியில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். பள்ளிகளில் சிறப்பு தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள காரணத்தால் இரண்டாண்டுக்கு பிறகு பொதுத்தேர்வு நடைபெறகிறது. இதன் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் மாலை நேரங்களிலும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் வகுப்பு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

இந்தநிலையில் தமிழக அரசு விடுமுறை அறிவித்த போதும் ஒரு சில தனியார் பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் சிறப்பு வகுப்பு நடைபெற்று வந்தது. நேற்றும் இன்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி துறைக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.அதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட எந்த ஒரு பள்ளியிலும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறக்கூடிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.