The death of a former soldier in the passage of the bus passing Due to taking a bus before landing ...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பேருந்தில் இருந்து இறங்குவதற்குள் பேருந்தை எடுத்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த முன்னாள் இராணுவ வீரர் மீது பின் பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த பெரிய ஐயம்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் சங்கர் (54). இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சங்கீதா, பெரிய ஐயம்பாளையம் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆவார்.
சங்கர், ஆரணியில் உள்ள இராணுவ கேண்டீனில் வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னைக்குச் சென்று கேண்டீனுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக்கொண்டு வேலூரில் உள்ள இராணுவ கேண்டீனில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து ஆரணிக்கு அரசு பேருந்தில் புறப்பட்டார்..
அந்தப் பேருந்து ஆரணி காந்தி சாலை ஜெமினி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது சங்கர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். படிக்கட்டுகளில் இருந்து இறங்குவதற்குள் பேருந்தை எடுத்ததால் சங்கர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த சங்கரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்..
இந்த சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
