செல்போன் மூலமாகவும், நேரடியாகவும் பலர் என்னை மிரட்டி வருவதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்ட சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இப்போ 2 போலீஸ் பாதுகாப்பு வைத்திருப்பது பேஷனாகிவிட்டது என கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக மூத்த நிர்வாகி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, இவர் திமுகவில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்தார். அப்போது கட்சியில் பதவி வழங்குவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சியை சேர்ந்த டெய்சி அருளை ஆபாசாமாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து சில மாதங்கள் நீக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பாஜகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சூர்யா சிவா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. நான் பா.ஜ.க ஓ.பி.சி. அணி மாநில. பொதுச்செயலாளர் உள்ளேன். இங்கு சேர்ந்தது முதல் இப்போது வரை செல்போன் மூலமாகவும், நேரடியாகவும் பலர் என்னை மிரட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் சேவைக்காகவும், கட்சி பணிக்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் தற்போது சிலர் என்னை பின்தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்பொழுது நீதிபதி தண்டபாணி கூறுகையில், மனுதாரர் சூர்யா சிவா யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரர் எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்பொழுது எல்லாம் ஒருவர் இரண்டு போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷனாக மாறிவிட்டது என கூறினார். இதனையடுத்து சூர்யா சிவா தரப்பு வழக்கறிஞர் போலீஸ் பாதுகாப்பு கேட்ட மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்