அடுத்த மூன்று மாதத்திற்குள் சுரங்க இரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்துவிடும் - மெட்ரோ இரயில் நிறுவன மேலாளர் உறுதி…
சென்னை
அடுத்த மூன்று மாதத்திற்குள் சென்னையில் நடைப்பெற்றுவரும் அனைத்து சுரங்க இரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துவிடும் என்று மெட்ரோ இரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி தெரிவித்தார்.
மே தினபூங்கா முதல் தேனாம்பேட்டை வரை நடைபெற்றுவந்த இரண்டு சுரங்கப்பாதைப் பணிகளில் முதல் சுரங்கப் பாதைக்கான இறுதிக் கட்டப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் பணிகளை தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஜெயகெளரி, முதன்மைப் பொது மேலாளர் விஜயகுமார் சிங் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ இரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறியது:
“சென்னையில் நடைபெற்றுவரும் சுரங்க இரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைத்து சுரங்க இரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துவிடும்.
மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பாதையில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இரயில்கள் இயக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.
இரண்டாம் கட்டப் பணிகளுக்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் படி அடுத்த மாதம் மாநில அரசு, ஜப்பான் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.