தஞ்சாவூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து..! இரண்டு பேர் உயிரிழப்பு- நிவாரணம் உதவி அறிவித்த முதலமைச்சர்
தஞ்சாவூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பிய பேருந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தும், நிவாரண உதவி அளித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு வழிபாட்டிற்காக கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலா வாகனம் இன்று (2-4-2023) அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்,
2 பேர் பலி- 40 பேர் காயம்
திருமதி லில்லி (வயது 63) மற்றும் ரியான் (வயது 9) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.மேலும் இவ்விபத்தில் கடும் காயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.மெர்சி (வயது 54), மற்றும் திரு அஜித் (வயது 24) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும். கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்