"பத்திரப்பதிவு குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குழப்பமாக உள்ளது "- விளக்கம் கேட்கிறது தமிழக அரசு...
ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என உத்தரவிட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இதனால் அங்கிகரிக்கப்படாத வீட்டு மனை பத்திரப்பதிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தாக்கல் செய்த புதிய விதிகளை ஏற்று அரசணையின் விதிகளின்படி பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் எனவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி வரையிலான காலங்களில் செய்யப்பட்ட பத்திரப்பதிவு செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இதனிடையே அங்கீகாரமற்ற மனைகளின் பதிவை தடுக்காமல் வரையறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யானை ராஜேந்திரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.