வண்டலூர் பூங்காவில் உள்ள குரங்குகள் மற்றும் பறவைகளை தத்தெடுத்தது பாரத ஸ்டேட் வங்கி; காசோலையும் வழங்கியது...
காஞ்சிபுரம்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகள் மற்றும் பறவைகளை தத்தெடுத்து அதற்கான காசோலையை பூங்காவுக்கு நேரில் சென்று கொடுத்தனர் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களை மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தெடுப்பது பல வருடங்களாக நடைபெற்று வரும் ஒன்றே.
வன உயிரினங்களின் பாதுகாப்பு அவசியம் பற்றி அறிந்து கொள்ளவும், வன உயிரினங்களின் மேல் அன்பு ஏற்படவும், அதனை ஊக்குவிப்பதற்காகவும் இந்த திட்டம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வகையில், பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு மற்றும் புறா, மயில், கிளி போன்ற சில பறவை இனங்களை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் நேற்று தத்தெடுத்தனர்.
இந்த விலங்குகள், பறவைகளுக்கு ஒரு வருடத்திற்கான உணவுச் செலவை ஏற்று அதற்குரிய தொகை ரூ.1 இலட்சத்து 99 ஆயிரத்து 733 ரூபாய்க்கான காசோலையை பூங்கா அதிகாரியிடம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் நேரில் கொடுத்தனர்.