பாபர் மசூதி இடிப்பு நாளான இன்று திருப்பூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு; இரயில், பேருந்து நிலையத்தில் கடும் சோதனை...
திருப்பூர்
பாபர் மசூதி இடிப்பு நாளான இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி இன்று திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான இரயில் நிலையம், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், கோவில்கள், பள்ளிவாசல்களுக்கு முன்பும் துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை காவலாளர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவியைக் கொண்டு சோதனை நடத்துகின்றனர். அதன்பின்னரே உள்ளேயோ வெளியேவோ செல்ல அனுமதித்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கிறது.
எனவே, ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெறும் இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர் முழுவதும் சுமார் 400–க்கும் மேற்பட்ட காவலாளார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.